Skip to main content

"ஹரிநாம சங்கீர்த்தனம்: சிவபெருமானின் பக்திப் பேராவல்"


சிவனின் நாம பஜனம்

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யரான  ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, 'பக்தி ரசாமிர்த சிந்து' என்னும் நூலின் நாற்பத்தி மூன்றாம் அத்தியாயத்தில், கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் சிவபெருமானுக்கு இருக்கும் அளவற்ற ஈடுபாட்டைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

மாமுனிவர் நாரதர் எம்பெருமானின் புகழைப் பாடிக்கொண்டிருந்தபோது, அதைக் கேட்டு மெய்மறந்த சிவபெருமானின் கழுத்தில் இருந்த நீல நிறக் கோடு மறைந்து போயிற்று. இதைக் கண்ட அவருடைய மனைவி கௌரி தேவி, தன் கணவருக்குப் பதில் வேறு யாரோ உருமாறி வந்திருப்பதாக ஐயமுற்று, அச்சத்தினால் உடனடியாக அவ்விடத்தை விட்டு அகன்றார்.

சிவபெருமானைத் திருமணம் புரியப் பணித்த கிருஷ்ணன்

சிவபெருமான் கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர் என்பது மட்டுமல்லாமல், அதைத் தியானிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்த உண்மை பல்வேறு வேத இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிரம்ம வைவர்த்த புராணத்தில் (1.6.4-16) கிருஷ்ணருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடந்த உரையாடல் இவ்வாறு விவரிக்கப்படுகிறது:

யோகிகளுள் சிறந்தவராகப் போற்றப்படும் சிவபெருமானை ஒருமுறை அழைத்த கிருஷ்ணர், "சிங்கத்தை வாகனமாகக் கொண்ட தேவியை நீ உன் மனைவியாக ஏற்க வேண்டும்" என்று கூறினார்.

இதைக் கேட்ட சிவபெருமான் புன்னகையுடன் பணிவாகப் பதிலளித்தார்: "மஹா மாயையான அந்த தேவியை என்னால் ஏற்க இயலாது. ஏனெனில், அவள் என் மனதை உம்முடைய பக்தியிலிருந்து திசைதிருப்பி, உமக்குச் செய்யும் சேவையில் தடையாக இருப்பாள். அவள் மெய்ஞ்ஞானத்தை மறைக்கக்கூடியவள்; பற்றுதலையும் புலன் இச்சைகளையும் தூண்டக்கூடியவள்; ஒருவருடைய தவ வலிமையை அழிக்கக்கூடியவள். அவள் மாயையின் இருப்பிடம்; கொடிய உலக பந்தத்திற்கு ஆதாரமானவள். அவளிடம் கொள்ளும் பற்று தீய வழிகளுக்கு இட்டுச் சென்று, உன்னதக் கருத்துக்களை அழித்து, ஒருவனை நற்பாதையிலிருந்து விலக்கிவிடும்.

"என் இறைவா! எனக்கு மனைவி வேண்டாம். எனக்கு விருப்பமான வரத்தை மட்டும் அருளுங்கள். உமக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எனது ஆவல் எப்போதும் பெருகிக்கொண்டே இருக்கிறது. உம்முடைய திருநாமங்களை உச்சரிப்பதிலும், உம்முடைய திருவடிகளுக்குச் சேவை செய்வதிலும் எனக்கு ஒருபோதும் சலிப்பு ஏற்பட்டதில்லை.

தந்-நாம பஞ்ச-வக்த்ரேண குணம் ச மங்கலாலயம் 

ஸ்வப்னே ஜாகரணே ஸஸ்வத் காயன் காயன் ப்ரமாம்யஹம்

"ஓ என் பிரபுவே ! உறக்கத்திலும் விழிப்பிலும் எப்போதும் அலைந்து திரியும் நான், மங்கலங்களின் இருப்பிடமான உம்முடைய திருநாமங்களையும் குணங்களையும் எனது ஐந்து முகங்களாலும் இடைவிடாது பாடிக்கொண்டிருக்க வேண்டும். (12)

ஆகல்ப-கோடி-கோடிம் ச த்வத்-ரூப-த்யான-தத்பரம் | 

போகேச்சா-விஷயே நைவ யோகே தபஸி மன்-மன: ||

கோடிக்கணக்கான கல்ப காலங்களுக்கு உம்முடைய வசீகரமான உருவத்தையே நான் தியானிக்க விரும்புகிறேன். எனவே லௌகீக இன்பங்கள், யோகக் கலைகள் அல்லது தவங்கள் ஆகியவற்றில் என் மனம் ஈடுபடுவதில்லை. (13)

த்வத்-ஸேவனே பூஜனே ச வந்தனே நாம-கீர்தனே |

 ஸதோல்லாஸிதம் ஏஷாம் ச விரதௌ விரதிம் லபேத் || (14)

உமக்குத் தொண்டு செய்வதிலும், உம்மை வழிபடுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும், உம் திருநாமங்களைச் சங்கீர்த்தனம் செய்வதிலும் நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அந்தச் செயல்கள் நின்றால் மட்டுமே எனது மகிழ்ச்சியும் நீங்கும். 

ஸ்மரணம் கீர்தனம் நாம-குணயோ: ஸ்ரவணம் ஜப: | 

த்வச்-சாரு-ரூப-த்யானம் த்வத்-பாதம் ஏவாபிவந்தனம் || (15)

ஸமர்ப்பணம் சாத்மனஸ் ச நித்யம் நைவேத்ய போஜனம் | 

வரம் வரேஸ தேஹீதம் நவதா-பக்தி-லக்ஷணம் || (16)

"வரங்களை அளிப்பவனே! ஒன்பது வகையான பக்தித் தொண்டுகளை (நவதா பக்தி) எனக்கு அருளுங்கள். அதன் மூலம் நான் எப்போதும் உம்முடைய லீலைகளை நினைவுகூரவும், உம் புகழையும் குணங்களையும் பாடவும் கேட்கவும், உம் அழகிய திருவுருவைத் தியானிக்கவும், உம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கவும், உம்மிடம் முழுமையாகச் சரணடையவும், உம்முடைய பிரசாதத்தை மட்டும் உண்ணவும் வேண்டுகிறேன்." 


பார்வதி தேவியின் நாம ஜப விரதம்

பத்ம புராணத்தின் ஆறாவது காண்டத்தில் (அத்தியாயம் 254), மகாமுனிவர் வியாசர் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை பார்வதி தேவி, மகாமுனிவர் வாமதேவரிடம் தன்னை விஷ்ணு வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டிக் கேட்டுக்கொண்டார். அதன்படி, வாமதேவர் அவருக்கு 'விஷ்ணு சகஸ்ரநாம' ஸ்தோத்திரத்தை உபதேசித்தார்.

அன்றிலிருந்து பார்வதி தேவி தினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தார். 

ஒருமுறை, கைலாயத்தில் துவாதசி தினத்தன்று விஷ்ணுவை வழிபட்டு அமர்ந்திருந்த சிவபெருமானிடம் பார்வதி தேவி வந்தார். தன் மனைவியைக் கண்ட சிவபெருமான், "உலகத்தாரால் வணங்கப்படும் தேவியே, வந்து என்னுடன் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வாய்" என்று அழைத்தார்.

அதற்குப் பார்வதி தேவி, "நாதனே, நீங்கள் உணவருந்துங்கள். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி முடித்த பின்னரே பிரசாதம் ஏற்பேன்" என்று பதிலளித்தார்.

சிவபெருமான் புன்னகையுடன் கூறினார்: "பார்வதி, நீ மிகவும் பாக்கியசாலி. விஷ்ணுவின் பக்தையாக இருக்கும் பேறு உனக்குக் கிடைத்துள்ளது. பெரும் புண்ணியம் இன்றி விஷ்ணு பக்தி கிடைப்பது அரிது.

ராம ராமேதி ராமேதி ரமே ராமே மனோரமே | 

ஸஹஸ்ர-நாம தத்-துல்யம் ராம-நாம வரானனே || (20)

"நானும் 'ராம, ராம, ராம' என்று ராம நாமத்தையே உச்சரிக்கிறேன். என் மனதைக் கவரும் அந்த ராம நாமத்திலேயே நான் திளைக்கிறேன். அழகிய முகம் கொண்டவளே! ராமனின் ஒரு நாமம், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது. (20)

பார்வதி, 'ரா' என்ற எழுத்தில் தொடங்கும் எந்தப் பெயரைக் கேட்டாலும், அது 'ராம' நாமமாக இருக்குமோ என்று எண்ணி என் மனம் மகிழ்ச்சி அடைகிறது. தேவியே! நீயும் ராம நாமத்தைச் சொல்லிவிட்டு இப்போது என்னுடன் வந்து பிரசாதத்தை ஏற்றுக்கொள்வாய் ."

ர-காராதீனி நாமானி ஸ்ருண்வதோ மம பார்வதி | 

மன: ப்ரஸன்னதாம் யாதி ராம-நாமாபிஸங்கயா ||

 ராமேத்யுக்த்வா மஹாதேவி புங்க்ஷ்வ ஸார்தம் மயாதுனா | (21)


சிவபெருமானின் அறிவுரைப்படி, பார்வதி தேவி புனிதமான ராம நாமத்தை உச்சரித்துவிட்டு, அவருடன் இணைந்து பகவானின் பிரசாதத்தை ஏற்றுக்கொண்டார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்


Comments