பாண்டவர்கள் தங்களது மனைவியான திரெளபதியுடன் வனவாசத்தில் இருந்தபோது, துர்வாசரும் அவரது சீடர்களும் வனத்திற்குச் சென்று பாண்டவர்களை சந்தித்தனர். சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்கள் பிராமணர்களை வரவேற்று உபசரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் துர்வாசரின் வருகைக்கு முன்னரே உணவருந்தி முடித்திருந்தனர் என்பதால், விருந்தினர்களுக்கு வழங்க அவர்களிடம் உணவு ஏதுமில்லை. குழப்பமடைந்த பாண்டவர்கள் உணவளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள் ஸ்நானம் செய்து விட்டு வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டனர். பகவான் கிருஷ்ணர் தமது பக்தர்களை எப்போதும் காக்க வேண்டும் என சபதம் கொண்டுள்ளார். எனவே, பாண்டவர்கள் குழப்பத்திலிருந்தபோது கிருஷ்ணர் அங்கே சென்று, “என்ன பிரச்சனை?” என்று வினவினார். அவர்கள் நடந்ததை விளக்கினர். கிருஷ்ணர் திரௌபதி உணவருந்தி விட்டாளா என்பதை விசாரித்தார். அவளும் தான் உண்டு முடித்து விட்டதாகக் கூறினாள். [திரெளபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது: அவள் உணவருந்தாத வரை அந்த பாத்திரத்திலிருந்து எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், அவளால் உணவளிக்க முடியும்.] சமையலறையில் சிறிதளவேனும் உணவு உள்ளதா என கிருஷ்ண...