Skip to main content

பக்திக்கும், தன்னுணர்விற்கும் உரிய பரமபுருஷராக எண்ணி அவர் மீது நாம் கருத்தைச் செலுத்த வேண்டும்

 


ஸர்வ-தீ-வ்ருத்தி-அனுபூத-ஸர்வ
ஆத்மா யதா ஸ்வப்ன ஜனேக்ஷிதைக:
தம் ஸத்யம் ஆனந்த-நிதிம் பஜேத
நான்யத்ர ஸஜ்ஜேத் யத ஆத்ம-பாத:


மொழிபெயர்ப்பு


ஒரு சாதாரண மனிதன், அவன் காணும் கனவுகளில் ஆயிரக்கணக்கான தோற்றங்களை சிருஷ்டிப்பதைப் போலவே, பல்வேறு தோற்றங்களின் தம்மை விரித்துக் கொள்பவரான பரமபுருஷரின் மீது மட்டுமே ஒருவன் தன் மனதை பதியச் செய்ய வேண்டும். ஒன்றேயான சர்வானந்த மெய்ப்பொருளின் மீது மட்டுமே தன் மனதை ஒருவன் பதிக்க வேண்டும். இல்லையெனில், ஒருவன் தவறாக வழிநடத்தப்பட்டு, தனது இழிவுக்கு தானே காரணமாகி விடுவான்.


பொருளுரை


இப்பதத்தில், பக்தித் தொண்டாற்றும் முறை சிறந்த கோஸ்வாமியாகிய, ஸ்ரீல சுகதேவரால் சுட்டிக் காட்டப்படுகிறது. தன்னுணர்வுப் பாதையின் பல்வேறு கிளைகளில் நம் கவனத்தை நாம் திருப்புவதற்குப் பதிலாக, பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நம் வழிபாட்டிற்கும், பக்திக்கும், தன்னுணர்விற்கும் உரிய பரமபுருஷராக எண்ணி அவர் மீது நாம் கருத்தைச் செலுத்த வேண்டும் என்பதை நம் மனதில் பதியச் செய்ய சுகதேவர் முயற்சிக்கிறார். தன்னுணர்வு என்பது, வாழ்வுக்குரிய ஜடப் போராட்டத்தை எதிர்த்து, நித்திய வாழ்வுக்காக மேற்கொள்ளும் ஒரு போராட்டமாகும். எனவே, பகிரங்க சக்தியின் ஏமாற்றுகிற கிருபையால், சிறந்த போராட்டக்காரனையும் கூட மீண்டும் ஜட வாழ்வின் சிக்கலில் பிணைத்து விடக்கூடிய பல வசிகர சக்திகளை, யோகி அல்லது பக்தனொருவன் எதிர்நோக்க வேண்டியுள்ளது. யோகியால் அணிமா மற்றும் லகிமா போன்ற அற்புதமான சித்திகளை அடைய முடியும். இவைகளால் ஒருவன் அணுவை விட மிகச் சிறியதாகவோ அல்லது மிகமிக இலேசானதைவிட இன்னும் இலேசாகவோ மாற முடியும். அதாவது, பெண்களையும், செல்வத்தையும் போன்ற பௌதிக ஆதாயங்களை ஒருவரால் அடைய முடியும். ஆனால் அத்தகைய வசிகரங்களுக்கு எதிராக ஒருவன் எச்சரிக்கப்படுகிறான். ஏனெனில் அத்தகைய மாயையான சுகபோகங்களில் மீண்டும் சிக்கிக் கொள்வதென்பது, ஆத்ம இழிவு மட்டுமல்லாமல் ஜட உலகில் நீடித்த சிறைவாசத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த எச்சரிக்கையைக் கொண்டு ஒருவன் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

பரம புருஷர் ஒருவரே, ஆனால் அவரது அவதாரங்கள் பலர். எனவே அவரே எல்லாவற்றுக்கும் பரமாத்மாவாக இருக்கிறார். ஏதேனும் ஒன்றை ஒரு மனிதன் பார்க்கும் பொழுது, அவனது பார்வை இரண்டாந்தரமானது என்பதையும், பகவானின் பார்வையே முக்கியமானது என்பதையும் அவன் அறிய வேண்டும். ஒரு பொருளை பகவான் முதலில் பார்க்கவில்லை என்றால், அதைப் பிறரும் பார்க்க முடியாது. அதுவே வேதம் மற்றும் உபநிஷதங்களின் கருத்தாகும். எனவே, நாம் எதைப் பார்த்தாலும், எதைச் செய்தாலும், அப்பார்வை அல்லது செயல் போன்ற எல்லா இயக்கங்களுக்கும் பரமாத்மாவாக (சாட்சியாக) இருப்பவர் பகவானேயாவார். தனிப்பட்ட ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையும், வேற்றுமையும் எனப்படும் இந்த தத்துவம், அசிந்த்ய-பேதாபேத தத்வம் என்று பகவான் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். பரம புருஷரின் பிரம்மாண்டமான அம்சம் அல்லது விராட்-ரூபம் ஜடத் தோற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. ஆகவே, பகவானின் விராட் அல்லது பிரம்மாண்ட தோற்றமே எல்லா உயிருள்ள, உயிரற்ற ஜீவன்களுக்கும் பரமாத்மாவாகும். ஆனால் இந்த விராட்-ரூபமும் கூட நாராயணர் அல்லது விஷ்ணுவின் ஒரு தோற்றமேயாகும். இப்படி தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால், அனைத்திற்கும் ஆதாரமான பரமாத்மாவாக இருப்பவர் ஸ்ரீகிருஷ்ணரே என்பதை முடிவில் ஒருவனால் காண முடியும். முடிவு என்னவெனில், ஒருவன் தயக்கமில்லாமல் ஸ்ரீகிருஷ்ணரை அல்லது அவரது விரிவங்கமாகிய நாராயணரை வழிபடலாம். வேறு எவரையும் வழிபடக் கூடாது. முதன் முதலாக நாராயணர் ஜடத்தின் மீது தமது துரிதமான பார்வையைச் செலுத்தியதால் சிருஷ்டி துவங்கியது. சிருஷ்டிக்கு முன் பிரம்மாவும் இருக்கவில்லை, சிவனும் இருக்கவில்லை. மற்றவர்களைப் பற்றி கூற என்ன இருக்கிறது. நாராயணர் ஜட சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவரென்றும் மற்றனைவரும் ஜட சிருஷ்டிக்கு உட்பட்டவர்களே என்றும் ஸ்ரீபாத சங்கராசாரியார் தீர்மானமாக ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, ஜட சிருஷ்டி முழுவதுமே நாராயணரோடு ஒன்றானதும் அதே சமயம் வேறானதுமாகும். மேலும் இது பகவான் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் அசிந்த்ய-பேதாபேத தத்துவத்தை ஆதரிப்பதாக இருக்கிறது. நாராயணரின் பார்க்கும் சக்தியிலிருந்து தோன்றியிருப்பதால், இப்பௌதிக சிருஷ்டி முழுவதும் அவரிலிருந்து மாறுபட்டதல்ல. அதே சமயம் இது அவரது பகிரங்கச் சக்தியின் (பஹிரங்க மாயா) விளைவாகவும், அந்தரங்க சக்தியிலிருந்து (ஆத்ம-மாயா) விலகியும் இருப்பதால், அவரிலிருந்து வேறானதாகவும் இருக்கிறது. இப்பதத்தில், கனவு காணும் மனிதனைப் பற்றிய சிறந்த உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. கனவு காண்பவன் அவனுடைய கனவில் அவன் தானே சிக்கிக் கொண்டவனாக ஆவதுடன், அதன் பலன்களினால் பாதிக்கப்படுபவனும் ஆகின்றான். இந்த ஜட சிருஷ்டியும் கூட, ஒரு கனவைப் போலவேயுள்ள பகவானின் சிருஷ்டியாகும். ஆனால் அவர், உன்னத பரமாத்மாவாக இருப்பதால், கனவைப் போன்ற அத்தகைய சிருஷ்டியின் பிரதிபலன்களால் பாதிப்படைவதும் இல்லை, அவற்றில் சிக்கிக் கொள்வதுமில்லை. அவர் எப்பொழுதும் தமது தெய்வீகமான நிலையிலேயே இருக்கிறார். அவரை விட்டுப் பிரிந்திருப்பது எதுவுமில்லை. அவரே அனைத்துமாவார். ஒருவன் அவரில் ஒரு பாகமாக இருப்பதால், வழி தவறி விடாமல் அவர் மீது மட்டுமே தன் கருத்தைப் பதிக்க வேண்டும். இல்லையெனில் ஜட சக்திகளினால், அவன் வெற்றி கொள்ளப்படுவது நிச்சயம். இது பகவத் கீதையில் (9.7) பின்வருமாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:


ஸர்வ-பூதானி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்
கல்ப-க்ஷயே புனஸ் தானி கல்பாதௌ விஸ்ருஜாமி அஹம்

குந்தி மகனே கல்ப முடிவில் ஒவ்வொரு ஜடத் தோற்றமும் என் இயற்கையில் நுழைகின்றன. அடுத்த கல்ப ஆரம்பத்தில் எனது சக்தியால் மீண்டும் நான் படைக்கிறேன்.”


ஆனால், படைத்தல், அழித்தல் எனும் தொடர்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கு இந்த மனிதப்பிறவி நல்லதொரு வாய்ப்பாகும். பகவானின் புறச் சக்தியிலிருந்து தப்பி அவரது அந்தரங்க சக்தியினுள் நுழைவதற்குரிய ஒரு கருவியாக இது இருக்கிறது.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏




Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more