Skip to main content

நாரத முனிவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி ஹரி நாம சங்கீர்த்தனம்

 


ஸ்வர - ப்ரஹ்மணி நிர்பாத - ஹ்ரிஷீகேச - பதாம்புஜே
அகண்டம் சித்தம் ஆவேஸ்ய லோகான் அனுசரன் முனி:


மொழிபெயர்ப்பு

இசையின் ஏழு சப்த ஸ்வரங்களான ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை இசைக் கருவிகளில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் சாம வேதத்திலிருந்து தான் முதன்முதலாக அவை வந்தன. மாமுனிவரான நாரதர் பரமபுருஷரின் லீலைகளை விவரித்து சப்தங்களை எழுப்புகிறார். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பது போன்ற திவ்யமான ஓசைகளின் மூலமாக, அவர் தமது மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் பதியச் செய்கிறார். இவ்விதமாக அவர் புலன்களின் நாயகரான ரிஷிகேசரை நேருக்கு நேராக தரிசிக்கிறார். ஹர்யஸ்வர்களைக் கடைத்தேற்றிய பிறகு, நாரத முனிவர், பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் மனதைப் பதித்தவராய், எல்லாக் கிரக அமைப்புக்களிலும் தொடர்ந்து சஞ்சரிக்கலானார்.


பொருளுரை


மாமுனிவரான நாரதரின் மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. அவர் பகவானின் லீலைகளைப் பற்றி எப்பொழுதும் பாடியபடி, இழிவடைந்த ஆத்மாக்களை மீட்டு பரமபுருஷரிடம் கொண்டு சேர்க்கிறார். இது தொடர்பாக, ஸ்ரீல பக்தி விநோத தாகுரர் பின்வருமாறு பாடியுள்ளார்:

நாரத - முனி, பாஜாய வீணா,
‘ராதிகா - ரமண’ - நாமே
நாம அமனி, உதித ஹய,
பகத - கீத - ஸாமே
அமிய - தாரா, வரிஷே கன,
ஸ்ரவண - யுகலே கியா
பகத - ஜன, ஸகனே நாசே,
பரியா ஆபன ஹியா
மாதுரீ - பூர, ஆஸப பசி’,
மாதாய ஜகத - ஜனே
கேஹ வாகாந்தே, கேஹ வா நாசே,
கேஹ மாதே மனே மனே
பஞ்ச - வதன, நாரதே தரி’,
ப்ரேமேர ஸகன ரோல
கமலாஸன, நாசியா பலே,
‘போல போல ஹரி போல’
ஸஹஸ்ரானன, பரம ஸுகே,
‘ஹரி ஹரி’ பலி’ காய
நாம - ப்ரபாவே, மாதில விஸ்வ,
நாம ரஸ ஸபே பாய
ஸ்ரீ - க்ருஷ்ண - நாம, ரஸனே ஸ்ஃபுரி’,
புரா’ல ஆமார ஆச
ஸ்ரீ - ரூப - பதே, யாசயே இஹா,
பகதிவினோத தாஸ

இப்பாடலின் பொருள் என்னவெனில், மகாத்மாவாகிய நாரத முனிவர், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயரான ராதிகா - ரமண என்ற நாமத்தைப் பாடியபடி தமது வீணையை மீட்டுகிறார். அவர் வீணையின் நரம்பை விரலால் சுண்டிய உடனேயே, எல்லா பக்தர்களும் பாட ஆரம்பிக்கின்றனர். இது அமுத மழை போன்ற இன்ப கானத்தை எழுப்புகிறது. எல்லா பக்தர்களும் ஆனந்தப் பரவச நிலையில் பூரண திருப்தி ஏற்படும்வரை ஆடி மகிழ்கின்றனர். அவ்வாறு ஆனந்தக் கூத்தாடும்பொழுது அவர்கள் மாதுரீ - பூர எனப்படும் பானத்தைப் பருகி உன்மத்த நிலையை அடைந்தவர்கள் போல் காணப்படுகின்றனர். அவர்களில் சிலர் அழுகிறார்கள், சிலர் நடனமாடுகிறார்கள், மற்றும் சிலர் வெளிப்படையாக நடனமாடவில்லை என்றாலும் இதயத்திற்குள் நடனமாடுகிறார்கள். சிவபெருமான் நாரத முனிவரை தழுவிக்கொண்டு தழுதழுத்த குரலில் பேசத் துவங்குகிறார். சிவபெருமான் நாரதருடன் கூத்தாடுவதைக் கண்ட பிரம்மதேவரும், “எல்லோரும் ‘ஹரி போல்! ஹரி போல்!’ என்று சொல்லுங்கள்” என்றவாறு அவர்களுடன் சேர்ந்து கூத்தாடுகிறார். சுவர்க்க ராஜனான இந்திரனும் படிப்படியாக அவர்களோடு சேர்ந்து கொண்டு “ஹரி போல்! ஹரி போல்!” என்று பாடிக்கொண்டே கூத்தாடத் துவங்குகிறார். இவ்விதமாக, பகவானுடைய புனித நாமத்தின் தெய்வீக ஓசையின் வசியத்திற்கு உட்பட்ட முழு பிரபஞ்சமும் பரவசமடைகிறது. “பிரபஞ்சம் பரவசமடையும்பொழுது நான் திருப்தியடைகிறேன். ஆகவே இந்த ஹரி நாம சங்கீர்த்தனம் இது போல் நன்றாக நடைபெற வேண்டுமென்று ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் தாமரைப் பாதங்களில் நான் பிரார்த்திக்கிறேன்” என்று ஸ்ரீல பக்திவிநோத தாகுரர் கூறுகிறார்.


பிரம்ம தேவர் நாரத முனிவரின் குருவாவார். நாரதர் வியாச தேவரின் குரு, வியாசதேவர் மத்வாசாரியரின் குரு. இவ்வாறாக இந்த கௌடீய மத்வ சம்பிரதாயம் நாரத முனிவரின் சீடப் பரம்பரை மூலமாக வருகிறது. இந்த சீடப் பரம்பரையின் அங்கத்தினர்கள் அதாவது, கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அங்கத்தினர்கள் நாரத முனிவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற திவ்ய மந்திரத்தை பாடிப் பரவ வேண்டும். அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று, ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதன் மூலமும், பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம், மற்றும் சைதன்ய சரிதாம்ருதம் ஆகியவற்றை உபந்நியாஸம் செய்வதன் மூலம், வீழ்ந்த ஆத்மாக்களைக் கடைத்தேற்ற வேண்டும். இது பரமபுருஷரை மிகவும் திருப்திப்படுத்தும். நாரத முனிவரின் உபதேசங்களை உண்மையாகப் பின்பற்றுபவனால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைய முடியும். நாரத முனிவரை ஒருவன் திருப்திப்படுத்தினால், பரமபுருஷராகிய ரிஷீகேசரும் திருப்தியடைவார் (யஸ்ய ப்ரஸாதாத் பகவத் - ப்ரஸாத்:) இப்போதுள்ள ஆன்மீக குரு நாரத முனிவரின் பிரதிநிதியாவார்; நாரதரின் உபதேசங்களுக்கும், தற்போதுள்ள ஆன்மீக குருவின் உபதேசங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. நாரத முனிவர், தற்போதைய ஆன்மீக குரு ஆகிய இருவருமே ஸ்ரீ கிருஷ்ணரின் அதே போதனைகளைத்தான் உபதேசிக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (18.65.66) கூறுகிறார்:

மன் - மனா பவ மத் - பக்தோ
மத் - யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே
ப்ரதிஜானே ப்ரியோ ‘ஸி மே
ஸர்வ - தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ - பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா சுச:

“எப்பொழுதும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டு என் பக்தனாய் ஆவாயாக. என்னை வழிபட்டு, உனது வணக்கத்தை எனக்குச் சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ தவறாது என்னிடம் வந்து சேருவாய். நீ எனது பிரிய நண்பனென்பதால், உனக்கு இந்த வாக்குறுதியை நான் அளிக்கிறேன். எல்லா வகையான மதங்களையும் துறந்து, என்னிடமே சரணடைவாயாக. உன்னை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கிறேன். பயப்படாதே.”


( ஶ்ரீமத் பாகவதம் 6.5.22 / பொருளுரை 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more