பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -15 புருஷோத்தம யோகம் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினான்காம் அத்தியாயத்தின் சுருக்கம் இயற்கையின் முக்குணங்களைப் பற்றி அறிவதால் முக்தி அடையலாம் என்பதால், அனைத்து ஜீவன்களின் தந்தையான கிருஷ்ணர் முக்குணங்களைப் பற்றி விளக்கினார். தூய்மை, பிரகாசம், பாவ விளைவுகளிலிருந்து விடுதலை ஆகியவை ஸத்வ குணத்தின் தன்மைகள்; எல்லையற்ற ஆசைகள், ஏக்கம் ஆகியவை ரஜோ குணத்தின் தன்மைகள்; சோம்பல், உறக்கம் போன்றவை தமோ குணத்தின் தன்மைகள். ஸத்வ குணம் மகிழ்ச்சியினாலும் ரஜோ குணம் பலன்நோக்குச் செயல்களாலும் தமோ குணம் பைத்தியக்காரத்தனத்தினாலும் ஆத்மாவைக் கட்டுப்படுத்துகின்றன. இம்மூன்று குணங்களும் ஒன்றையொன்று போட்டியிடுவதால், சில நேரங்களில் ஒரு குணம் மற்ற குணங்களைக் காட்டிலும் மேலோங்கி நிற்கும். ஸத்வ குணத்தில் வாழ்பவன் தனது தூய செயல்களால் உயர் லோகங்களை அடைகிறான்; ரஜோ குணத்தில் வாழ்பவன் தனது துன்பமான செயல்களால் பூலோக வாழ்க்கையை தொடர்கிறான்; தமோ குணத்தில் வாழ்பவன் தனது முட்டாள்தனமான செயல்களால் நரக வாழ்க்கையை அடைகிறான். மூன்று குணங்களுமே பந்தப்படுத்துபவை என்பதால், இவ...