வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ் *************************** கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கும் இடையில் உலகெங்கிலும் அவ்வப்போது வாதங்கள் நடைபெறுகின்றன. அவ்வாதங்களின் இறுதியில், கடவுள் இருக்கின்றார் என்பதே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றது. எண்ணிலடங்காத அத்தகு வாதங்களின் ஒரு சிறு பகுதி, பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது. கடவுள் இல்லை என்பதைக் காட்டிலும் கடவுள் இருக்கின்றார் என்பதற்கே சாட்சிகள் அதிகமாக உள்ளன. அதை நிரூபிப்பதற்கான சில தகவல்கள்: * இவ்வுலகில் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவைக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, தேவைப்பட்டு இல்லாமல் இருப்பதும் ஏதுவும் இல்லை. உதாரணமாக, தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் இருக்கின்றது, பலதரப்பட்ட உயிரினங்களின் பசியைத் தணிப்பதற்குப் பலதரப்பட்ட உணவு வகைகள் உள்ளன. இவற்றைக் கூர்ந்து கவனித்தால், இவற்றையெல்லாம் முறையாக நிர்வகிப்பவர் ஒருவர் இருப்பதை நிச்சயம் உணரலாம். * ஓர...