விருந்தாவனம் எப்போதும் கிருஷ்ணரின் நினைவில் ஆழ்ந்திருந்தது . எல்லோரும் அவரின் லீலைகளை எண்ணியபடிப் பரமானந்த சாகரத்தில் மூழ்கியிருந்தார்கள் . ஆனால் ஜடவுலகம் மாசுக்கள் நிரம்பியதாகையால் விருந்தாவனத்திலும் கூட அசுரர்கள் அமைதியைக் குலைக்க முற்பட்டார்கள் . அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து , குளம்புகளால் பூமியைக் கிளறியபடிக் குழப்பம் விளைவிக்கலானான் . பெரும் பூகம்பம் ஏற்பட்டதுபோல் நிலம் அதிர்ந்தது . அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறியபின் கிராமத்தினுள் நுழைந்தான் . அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாகவிருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும் , சினையுற்றிருந்த சில பசுக்களுக்கும் கர்ப்பச் சேதம் ஏற்பட்டது . எருதின் உடல் மிகப் பெரியதாகவும் , பலமுள்ளதாகவுமிருந்ததால் , மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்திருப்பதுபோல் அவனின் உடல் மேலும் ஒரு மேகம் சுற்றி வந்தது . அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண் , ப...