அயோத்தியா (பகவான் இராமசந்திரரின் திருத்தலம்) வழங்கியவர் : ஜீவன கௌர ஹரி தாஸ் *********************************************************************************** அழகான சரயு நதிக்கரை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று, ஸ்ரீ இராமர் பிறந்த புண்ணிய பூமி, அவர் சுமார் 12,000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்தலம், சமீப கால இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய இடம் என பல்வேறு அடைமொழிகளைக் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற எமது நீண்டநாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது. இராம ஜென்ம பூமி அயோத்தியாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கக்கூடிய இடம், இராம ஜென்ம பூமி. பகவான் ஸ்ரீ இராமர் தனது லீலைகளை அரங்கேற்றுவதற்காக இவ்வுலகில் அவதரித்த இடம், தற்போது இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறப்பு வாய்ந்த இடத்தைக் காண்பதற்காக நாங்களும் சென்றோம். சமீப காலத்தின் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக, இராம ஜென்ம பூமி தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்விடத்தைச் சென்றடைய பல அடுக்கு பாதுகாப்பு சோதனைக...