யுதிஷ்டிர மகாராஜன், “அஜித” அல்லது தவறாதவரான பகவானின் பாதுகாப்பில் இருப்பதால், மேலே குறிப்பிட்டிருப்பதுபோல், பகவானின் செல்வங்களான, நதிகள், சமுத்திரங்கள், மலைகள், காடுகள் முதலான அனைத்தும் திருப்தியடைந்து, அதன் உற்பத்திப் பொருட்களை வரியாக அரசருக்கு அளித்து வந்தன. பரம புருஷரின் பாதுகாப்பின் கீழ் புகலிடம் தேடுவதுதான் வெற்றியின் இரகசியமாகும். அவரது அனுமதியின்றி எதுவும் சாத்தியமாகாது. கருவி மற்றும் இயந்திரங்களின் பலத்தைக் கொண்டு நமது சொந்த முயற்சியால் பொருளாதாரத்தை உயர்த்துவது அனைத்தும் ஆகிவிடாது. பரம புருஷரின் அனுமதி இருக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு கருவிகளின் உதவி இருந்தபோதிலும், அனைத்தும் தோல்வியாகவே முடியும். வெற்றிக்கு முடிவான காரணமாக இருப்பவர் “தைவ”, பரம புருஷராவார். பரம புருஷரின் பிரதிநிதியாக இருந்து, பொதுமக்களின் நலனை கவனித்துக் கொள்ள வேண்டியது அரசரின் கடமை என்பதை யுதிஷ்டிர மகாராஜனைப் போன்ற அரசர்கள் நன்கறிவர். உண்மையில் நாடு பரம புருஷருக்குச் சொந்தமாகும். நதிகள், சமுத்திரங்கள், காடுகள், மலைகள் மற்றும் மூலிகைகள் போன்றவை மனிதனால் உண்டாக்கப்பட்டவை அல்ல. அவை பகவானின் படைப்புகளாகும். ம...