கோகுலத்தில் ஆயர்குலச் சிறுவர்களுக்குத் தரப்படும் முதல் பொறுப்பு கன்றுகளைப் பராமரித்தல், குழந்தைப் பருவத்திலிருந்தே சிறுவர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே கிருஷ்ணரும் பலராமரும் மற்ற ஆயர்குலச் சிறுவர்களுடன் மேய்ச்சல் நிலங்களில் கன்றுகளைக் கவனித்தபடி விளையாடினார்கள். கன்றுகளைப் பொறுப்பேற்று அழைத்துச் செல்லும் போது சகோதரர்களான கிருஷ்ணரும் பலராமரும் சில வேளைகளில் புல்லாங்குழலை இசைத்தார்கள். சில வேளைகளில் அவர்கள் ஆமலகீப் பழங்களையும் பலாப்பழங்களையும் எடுத்துப் பந்தாடினார்கள். சில சமயங்களில் அவர்கள் கால் சலங்கைகள் ஒலிக்க நர்த்தனம் செய்தனர். சில வேளைகளில் அவர்கள் கம்பளங்களால் தங்களை மூடிக்கொண்டு எருதுகள் போலவும் பசுக்கள் போலவும் பாவனை செய்து விளையாடினர். பலராமரும் கிருஷ்ணரும் இப்படி விளையாடினார்கள். பசுக்களையும் எருதுகளையும் போல் உருமிக் கொண்டு சண்டை போடுவார்கள். இப்படியாக அவர்கள் சாதாரணக் குழந்தைகளைப் போல் குழந்தைத்தனமான விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். ஒருநாள், கிருஷ்ணரும் பலராமரும் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வத்ஸாசுரன் என்ற பெயருடைய அரக்கன் ஒரு கன்றின...