பாத்ரபத மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அஜா - அன்னதா ஏகாதசியாக கொண்டாடுவர். அஜா - அன்னதா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். ஸ்ரீ யுதிஷ்டிரர் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம்- "ஹே ! ஜனார்தனா, இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாத்து ரட்சிப்பவரே, பாத்ரபத மாதத்தின் (ஆகஸ்ட் -செப்டெம்பர்) கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரையும், அதன் மகத்துவத்தையும் விரிவாக எனக்கு எடுத்துரையுங்கள்" என்று வேண்டி நின்றார். பகவான் ஶ்ரீ கிருஷ்ண தர்மபுத்ரரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பதிலளிக்கையில் "ஹே! ராஜன், நான் சொல்லுவதை மிகவும் கவனத்துடன் கேள், பாபங்களைப் போக்கும் இந்த புண்ய ஏகாதசி அஜா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால், பாபத்தின் கர்ம விளைவுகளிலிருந்து விடுபடுவர். அஜா ஏகாதசியின் மஹிமையை காதால் கேட்டாலே, கேட்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறும். ...