இராமானுஜர் காட்டிய வைஷ்ணவ சேவை வழங்கியவர் : ஜீவன கௌரஹரி தாஸ் வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் ஶ்ரீபாத இராமானுஜர் . ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017 ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார் . இராமானுஜரின் தோற்றம் , செயல்கள் , உபதேசம் , மறைவு என அனைத்துமே திவ்யமான லீலைகளாகும் . ஸ்ரீ ஸம்பிரதாயம் எனப்படும் இராமானுஜ பரம்பரையில் பகவத் கைங்கரியத்தோடு இணைந்து வைஷ்ணவ கைங்கரியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . ஒரு பக்தன் தனது ஆச்சாரியருக்கும் சக வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதில் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும் . அத்தகு மனப்பான்மையினை இராமானுஜரின் வாழ்விலும் அவரைச் சார்ந்த இதர பக்தர்களின் வாழ்விலிருந்தும் சில உதாரணங்களை வைத்து அறிவோமாக . திருக்கச்சி நம்பிகள் புரிந்த வைஷ்ணவ சேவை காஞ்சிபுரத்தில் இராமானுஜர் வாழ்ந்த சமயத்தில் வரதராஜ பெருமாளுக்கு திருக்கச்சி நம்பிகள் ( காஞ்ச...