Skip to main content

கிருஷ்ண உணர்வில் பற்றுதல் மற்றும் துறவு

 



உண்மையில், ஒரு ஜீவராசிக்குச் சொந்தமாக இருப்பது ஒன்றுமில்லை. ஆகவே எதையும் அவனால் துறக்கவும் முடியாது என்பதுதான் உண்மை. ஒரு ஜீவராசி அதிக மதிப்புள்ள ஒன்றை அடைவதற்காக ஏதேனும் ஒன்றை துறக்கிறான். ஒரு மாணவன் சிறந்த கல்வியைப் பெறுவதற்காக குழந்தைத்தனமான விருப்பங்களை தியாகம் செய்கிறான். வேலைக்காரன் நல்ல வேலைக்காக சாதாரண வேலையைக் கைவிடுகிறான். அதைப் போலவே, உண்மையான ஆன்மீக மதிப்புள்ள ஒரு பொருளுக்காக பக்தரொருவர் ஜடவுலகைத் துறக்கிறார். ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி மற்றும் ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி முதலானவர்கள் பகவானின் தொண்டிற்காக ஆடம்பரத்தையும், செழிப்பையும் துறந்தனர். பௌதிக கணக்குப்படி அவர்கள் பெரிய மனிதர்களாக இருந்தவர்களாவர். கோஸ்வாமிகள் வங்காளதேசத்து அரசாங்கத்தில் மந்திரிகளாக இருந்தனர். மேலும் ரகுநாத தாஸ கோஸ்வாமி ஒரு பெரிய ஜமீன்தாரின் மகனாக இருந்தார். ஆனால் ஏற்கெனவே அவர்கள் பெற்றிருந்ததைவிட உயர்வான ஒன்றைப் பெறுவதற்காக அனைத்தையும் அவர்கள் துறந்தனர். பொதுவாக பக்தர்கள் பௌதிக செல்வங்களை அவ்வளவாகப் பெற்றிருப்பதில்லை. ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களில் மிகவும் இரகசியமான பொக்கிஷம் ஒன்றை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர். ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியைப் பற்றி நல்ல கதை ஒன்றுள்ளது. அவரிடம் ஒரு கட்டளைக்கல் (சிந்தாமணிக் கல்) இருந்தது. மேலும் இக்கல் குப்பைகளுக்கு இடையில் வைக்கப்பட்டு இருந்தது. அக்கல் தேவைப்பட்டதால் அதை ஒருவன் எடுத்துக் கொண்டான். ஆனால் பிறகு, மதிப்புயர்ந்த அக்கல் ஏன் புறக்கணிக்கப்பட்ட அத்தகைய இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது என்று அவன் யோசித்தான். பிறகு மிகவும் மதிப்புயர்ந்த பொருள் வேண்டுமென்று ஸநாதன கோஸ்வாமியிடம் கேட்ட அவனுக்கு பகவானின் புனித நாமம் வழங்கப்பட்டது. அகிஞ்சன என்றால் கொடுப்பதற்கு எந்த பௌதிக பொருளையும் பெற்றிருக்காதவர் என்று பொருள்படும். உண்மையான பக்தர் அல்லது, மகாத்மா ஒருவர் பௌதிக சொத்துகளை ஏற்கனவே துறந்துவிட்டவர் என்பதால், பௌதிகமான எதையும், யாருக்கும் அவர் கொடுப்பதில்லை. ஆயினும், பரம சொத்தாகிய பரம புருஷ பகவானை அவரால் அளிக்க முடியும். ஏனெனில் உண்மையான பக்தரின் ஒரே சொத்து பகவான்தான். குப்பையில் வீசப்பட்டுக் கிடந்த சிந்தாமணிக் கல் ஸநாதன கோஸ்வாமியின் உண்மையான சொத்தல்ல. அப்படி இருக்குமானால் அது ஏன் அத்தகைய ஓரிடத்தில் வீசப்பட்டிருக்க வேண்டும்? பௌதிக ஆசைகளும், ஆன்மீக முன்னேற்றமும் ஒத்துப் போவதில்லை என்பதை புதிய பக்தர்களுக்குப் புரிய வைப்பதற்காகவே இந்த உதாரணம் கொடுக்கப்படுகிறது! அனைத்தையும் பரம புருஷருடன் தொடர்புள்ள ஆன்மீகப் பொருளாகக் காணக்கூடியவராக இருந்தால் அல்லாது, ஜடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஒருவர் எப்பொழுதும் பிரித்தறிய வேண்டியிருக்கும். ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியைப் போன்ற ஆன்மீக குரு ஒருவரால் அனைத்தையும் ஆன்மீக பொருட்களாகவே காணமுடியும் என்றபோதிலும், நமக்கு அத்தகைய ஆன்மீக பார்வை இல்லை என்பதால், நமக்காகவே இவ்வுதாரணத்தை அவர் அமைத்திருக்கிறார்.


பௌதிக காட்சியில் அல்லது பௌதிக நாகரிகத்தில் முன்னேறுவதென்பது, ஆன்மீக முன்னேற்றத்திலுள்ள பெரும் தடைக்கல்லாகும். இத்தகைய பௌதிக முன்னேற்றம், ஜீவராசியை ஜடவுடலெனும் பந்தத்தில் சிக்கவைத்து விடுகிறது. இதைத் தொடர்ந்து எல்லா வகையான பௌதிக துன்பங்களும் விளைகின்றன. இத்தகைய பௌதிக முன்னேற்றம் அனர்த்தம், அல்லது தேவையற்ற பொருள் என்று அழைக்கப்படுகிறது. நிஜமாகவே இது உண்மைதான். தற்போதைய பௌதிக நாகரிகத்தில் உதடுகளுக்குப் பூசும் சாயத்திற்காக ஒருவர் அதிகமான பணத்தை செலவழிக்கிறார். மேலும் தேசாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட பல தேவையற்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பல தேவையற்ற பொருட்களிடம் கவனத்தைத் திருப்புவதால், மனித வாழ்வில் முக்கிய தேவையாக உள்ள ஆன்மீகத் தன்னுணர்வு அடையப்படாமலேயே மனித சக்தி வீணாக்கப்பட்டு விடுகிறது. சந்திரனை அடையும் முயற்சி, சக்தியை வீணாக்குவதற்கு மற்றொரு உதாரணமாகும். ஏனெனில், ஒருவேளை சந்திரனை அடைந்துவிட்டாலும் கூட, வாழ்வின் பிரச்சினைகள் தீர்க்கப்படப் போவதில்லை. பகவானின் பக்தர்கள் “அகிஞ்சனர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். பகவானின் பக்தரொருவருக்கு எவ்வித பௌதிக சொத்துகளும் இல்லை என்பதால் அவர் “அகிஞ்சன” என்று அழைக்கப்படுகிறார். அத்தகைய பௌதிக சொத்துக்கள் அனைத்தும் ஜட இயற்கையின் முக்குணங்களில் இருந்து உண்டானவையாகும். அவை ஆன்மீக சக்தியை தடுத்துவிடுகின்றன. எனவே அவற்றை எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக நாம் பெற்றிருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக ஆன்மீக முன்னேற்றத்தைப் பெறும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.


பரம புருஷ பகவான் பௌதிக செயல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கவில்லை. இந்த ஜடவுலகில் அவரால் நிகழ்த்தப்படும் எல்லா செயல்களும் கூட ஆன்மீகமானவையும், ஜட இயற்கைக் குணங்களின் தொடர்பு இல்லாதவையுமாகும். பகவானின் அனைத்து செயல்களும், ஜடவுலகிலுள்ள அவரது தோற்றம் மற்றும் மறைவு ஆகியவையும் கூட தெய்வீகமானவை என்றும், இதை நன்கு அறிந்திருப்பவர் இந்த ஜடவுலகில் மீண்டும் பிறப்பெடுக்காமல் ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்வார் என்றும் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.


ஜட இயற்கையில் பற்றுக் கொண்டு அதை அடக்கியாள முயல்வதே பௌதிக நோயிற்கான காரணமாகும். இந்நிலை இயற்கையின் முக்குணங்களின் சேர்க்கையினால் விளைவதாகும். இத்தகைய பொய்யான இடத்தில் பகவானோ அல்லது பக்தர்களோ பற்றுக் கொண்டிருப்பவர்கள் அல்லர். எனவேதான் அவர்கள் “நிவ்ருத்த-குண-வருத்தி” என்று அழைக்கப்படுகின்றனர். பூரணமான “நிவ்ருத்த-குண-வருத்தி”யாக இருப்பவர் பரம புருஷராவார். ஏனெனில் அவர் கூட இயற்கைக் குணங்களினால் ஒருபோதும் கவரப்படுவதேயில்லை. ஆனால் ஜீவராசிகளுக்கு அத்தகைய ஒரு சுபாவம் உண்டு. அவர்களில் சிலர் ஜட இயற்கையின் மாயையான கவர்ச்சியில் அகப்பட்டுக் கொள்கின்றனர்.


பகவான் பக்தர்களுக்குச் சொந்தம், பக்தர்கள் பகவானுக்குச் சொந்தம் எனும் பரஸ்பர உறவை அவர்கள் கொண்டிருப்பதால், பக்தர்கள் நிச்சயமாக ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டவர்களாகவே உள்ளனர். அதுதான் எதிர்பார்க்கக்கூடிய ஒரு முடிவாகும். துன்பத்தையும், ஏழ்மையையும் போக்கிக் கொள்வதற்காகவோ அல்லது கேள்விகளுக்கும், கற்பனைகளுக்கும் விடை காண்பதற்காகவோ பகவானை அணுகும் கலப்படமுள்ள பக்தர்கள், இத்தகைய கலப்படமற்ற தூய பக்தர்களிலிருந்து முற்றிலும் வேறானவர்களாவர். கலப்படமற்ற பக்தர்களும், பகவானும் ஒருவரோடொருவர் தெய்வீகமான பற்று கொண்டுள்ளனர். பகவானுக்கு மற்றவர்களுடன் பரிமாற்றம் கொள்வதற்கு ஒன்றுமில்லை, எனவே அவர் “ஆத்மாராம” அல்லது சுய திருப்தியுடையவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் சுய திருப்தியுடையவராக இருப்பதால், பகவானின் இருப்பில் இரண்டறக் கலந்துவிட விரும்பும் அத்வைதிகளுக்கெல்லாம் அவரே தலைவராக இருக்கிறார். இத்தகைய அத்வைதிகள், பகவானின் உடலிலிருந்து வெளிப்படும் பிரகாசமாகிய பிரம்ம ஜோதியில் கலந்துவிடுகின்றனர். ஆனால் பக்தர்களோ பகவானின் தெய்வீக லீலைகளில் பங்கு கொள்கின்றனர். பக்தர்களின் நிலையை பௌதிகமானதென்று ஒருபோதும் தப்பாக புரிந்துகொள்ளக் கூடாது.




ஶ்ரீமத் பாகவதம் 1.8.27 / பொருளுரை



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...