ஸ்ரீ முகுந்த தத்தர் சட்டகிராம என்னும் மாவட்டத்தைச் சார்ந்த சன்ஹரா என்னும் கிராமத்தில் பிறந்தவர், அந்த கிராமம் பாடியா எனப்படும் காவல்நிலையத்தின் எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமம் புண்டரீக வித்யாநிதியின் இல்லத்திலிருந்து பத்து க்ரோஷ,ம், அல்லது சுமார் இருபது மைல் தொலைவில் அமைந்துள்ளது. கௌஆர-க ணோத் தே,ஷ₂-தீ,பிகா (140) கூறுகிறது:
வ்ரஜே ஸ்தி, தௌ காயகௌ யௌ மது கண்ட,-மது வ்ரதௌ முகுந்த - வாஸுதே வௌ தௌ தத்தௌ கௌ₂ராங்க -கா₂யகௌ
"மதுகண்டர், மதுவிரதர் என்ற பெயர்களுடன் இரு அற்புதமான பாடகர்கள் விரஜத்தில் இருந்தனர். அவர்கள் சைதன்ய லீலையில் முகுந்தராகவும் வாஸுதேவ தத்தராகவும் தோன்றினர், அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சமுதாயத்தில் பாடகர்களாக செயல்பட்டனர்." சைதன்ய மஹாபிரபு மாணவராக இருந்தபோது, முகுந்த தத்தர் அவருடைய பள்ளித் தோழராவார், அவர்கள் தர்க்க வாதங்களில் அடிக்கடி ஈடுபடுவதுண்டு. சில நேரங்களில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முகுந்த தத்தருடன் தர்க்கத்தின் தந்திரங்களை உபயோகித்து சண்டையிடுவார். இது சைதன்ய பாகவதத்தின் ஆதி காண்டத்தில் அத்தியாயங்கள் பதினொன்றிலும் பன்னிரண்டிலும் விளக்கப்பட்டுள்ளது. சைதன்ய மஹாபிரபு கயாவிலிருந்து திரும்பியபோது முகுந்த தத்தர் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கிருஷ்ண லீலைகளைப் பற்றிய ஸ்லோகங்களை பாராயணம் செய்து அவரை மகிழ்வித்தார். இவருடைய முயற்சியின் காரணத்தினால்தான் கதாதர பண்டித கோஸ்வாமி புண்டரீக வித்யாநிதியின் சீடரானார் என்று ஸ்ரீ சைதன்ய பாகவதம், மத்திய காண்டம், ஏழாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. முகுந்த தத்தர் ஸ்ரீவாஸ பண்டிதரின் முற்றத்தில் பாடியபோது, அவருடைய பாடலுக்கு மஹாபிரபு ஆடினார். ஸாத-ப்ரஹரியா என்று அறியப்படும் பரவச தோற்றத்தினை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இருபத்தொரு மணி நேரத்திற்கு வெளிப்படுத்தியபோது, அந்நிகழ்ச்சியினை முகுந்த தத்தரே பாடி தொடக்கி வைத்தார்.
சில நேரங்களில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முகுந்த தத்தரை கஃட,ஜாடி,யா பே.டா என்று அழைத்து கண்டித்ததுண்டு ; ஏனெனில், அவர் வெவ்வேறு தரப்பட்ட அபக்தர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது சைதன்ய பாகவதத்தின் மத்திய காண்டத்தின் பத்தாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரசேகரரின் இல்லத்தில் நடனமாடுவதற்காக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தம்மை லக்ஷ்மியைப் போன்று உடையுடுத்திக் கொண்டபோது, முகுந்த தத்தர் முதல் பாடலினைத் தொடங்கினார்.
சந்நியாசம் ஏற்பதற்கான தமது விருப்பத்தினை அனைவருக்கும் வெளிப்படுத்துவதற்கு முன்பாக, பகவான் சைதன்யர் முதலில் முகுந்த தத்தரின் இல்லத்திற்குச் சென்றார். ஆனால் சந்நியாசம் எடுப்பதற்கு முன்பாக மேலும் சில நாள்கள் ஸங்கீர்த்தன இயக்கத்தினைத் தொடரும்படி அச்சமயத்தில் முகுந்த தத்தர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை வேண்டினார். இது சைதன்ய பாகவதம், மத்திய காண்டம், இருபத்தாறாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்கவிருக்கும் தகவல் நித்யானந்த பிரபுவின் மூலமாக கதாதர பண்டிதர், சந்திரசேகர ஆச்சாரியர், மற்றும் முகுந்த தத்தருக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அவர்கள் அனைவரும் கட்வாவிற்குச் சென்று கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்தனர், மேலும், ஸ்ரீ சைதன்யர் சந்நியாசம் ஏற்பதற்கான எல்லா உபகரணங்களையும் ஏற்பாடு செய்தனர். மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பின்னர், அவர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். குறிப்பாக, ஸ்ரீ நித்யானந்த பிரபு, கதாதர பிரபு, முகுந்த தத்தர் ஆகிய மூவரும் அவரை புருஷோத்தம் க்ஷேத்திரம் வரை வழியெங்கும் பின்தொடர்ந்தனர்.இது தொடர்பாக ஸ்ரீ சைதன்ய பாகவதம், அந்திய காண்டம், இரண்டாவது அத்தியாயத்தினை அணுகலாம். ஜலேஸ்வரம் என்று அறியப்படும் இடத்தில் நித்யானந்த பிரபு சைதன்ய மஹாபிரபுவின் சந்நியாச தண்டத்தினை உடைத்தார். அச்சமயத்தில் முகுந்த தத்தரும் அங்கு இருந்தார். அவர் ஆண்டுதோறும் வங்காளத்திலிருந்து ஸ்ரீ சைதன்யரைக் காண்பதற்காக ஜகந்நாத புரிக்குச் சென்றார்.
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் - ஆதிலீலை 10.40 - பொருளுரை:
முகுந்த தத்தர் மாயாவாத அருவவாதிகளுடன் பழகியதால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சங்கத்தில் நுழைவதற்கு ஒருமுறை தடை விதிக்கப்பட்டிருந்தார். சைதன்ய மஹாபிரபு தமது மஹா-ப்ரகாஷ₂த்தினை வெளிப்படுத்தியபோது, அவர் எல்லா பக்தர்களையும் ஒருவர் பின் ஒருவராக அழைத்து ஆசிர்வதித்தார், முகுந்த தத்தரோ கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். முகுந்த தத்தர் வெளியே காத்திருப்பதாக பக்தர்கள் மஹாபிரபுவிடம் தெரிவித்தனர், மஹாபிரபுவோ, "அவன் பக்தர்களிடம் பக்தித் தொண்டை விளக்குகிறான், ஆனால் அதன் பிறகு மாயாவாதிகளுடன் சென்று மாயாவாதக் கொள்கைகள் நிறைந்துள்ள யோக - வாஷி, ஷ்ட,- ராமாயணத்தினை அவர்களிடமிருந்து கேட்கின்றான். இதனால், நான் அவன்மீது அதிருப்தி அடைந்துள்ளேன். எனவே, நான் முகுந்த தத்தனுடன் இப்போதைக்கு திருப்தியடைய மாட்டேன்," என்று பதிலளித்தார். மஹாபிரபு இவ்வாறு பேசியதை வெளியில் நின்றபடி கேட்ட முகுந்த தத்தர், பகவான் இப்போதைக்கு தன்மீது திருப்தியடையவில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் திருப்தியடைவார் என்று எண்ணி பெருமகிழ்ச்சியுற்றார். இருப்பினும், மாயாவாதிகளின் சங்கத்தினை முகுந்த தத்தர் நிரந்தரமாகக் கைவிடப் போகிறார் என்பதை மஹாபிரபு புரிந்து கொண்டபோது, மிகவும் திருப்தியுற்று முகுந்தனை உடனடியாக, தம்மைக் காண்பதற்கு அழைத்தார். இவ்வாறாக, அவர் மாயாவாதிகளின் சங்கத்திலிருந்து முகுந்தனை விடுவித்து தூய பக்தர்களின் சங்கத்தினை வழங்கினார்.
ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் - ஆதிலீலை 17.65 - பொருளுரை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment