வாமன அவதாரம் 🔆🔆🔆🔆🔆 பரம புருஷ பகவானின் முக்கிய அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அனைத்து மகான்களும் கூறியுள்ளனர். அசுரர்களிடமிருந்து தேவலோகத்தை மீட்டு மீண்டும் தேவர்களிடம் ஒப்படைப்பதற்காக ஒரு பிராமண சிறுவனின் வடிவில் பகவான் தோன்றினார். வாமனர் என்று அறியப்படும் அவரது அவதாரத்தின் சில முக்கிய சிறப்புகளை நாம் இங்கு காண்போம். வழங்கியவர்: ஸ்ரீ நாராயண தாஸ் கதைச் சுருக்கம் தேவலோகத்தை மாமன்னர் பலி கைப்பற்றுதல் அமரத்துவம் அடைய விரும்பிய தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்தனர். பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, அமுதத்தை தேவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அதன் பின்னர் ஏற்பட்ட போரில் இந்திரன் தலைமையிலான தேவர்கள் வெற்றி பெற, பலி மஹாராஜரின் தலைமையிலான அசுரர்கள் தோல்வியுற்று மரணத்தின் அருகில் சென்றனர். (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தின் 5-12 அத்தியாயங்களை விரிவாகப் படித்தல் நன்று) பிருகு வம்சத்தில் வந்த சுக்ராசாரியர், பலி மஹாராஜரிடம் இரக்கம் கொண்டு, அவரை மீண்டும் உயிர்பெறச் செய்தார். தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்...