ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரேமையின் உயர்நிலை 🍁🍁🍁🍁🍁🍁🍁 தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும் இனிப்பும் கலந்த பரவசத்தில் மேன்மேலும் மூழ்கியபடி இருந்தார். பகலில் பல்வேறு செயல்கள் அவரது மனதை ஓரளவிற்கு திசை திருப்பும், ஆனால் இரவில் கிருஷ்ணரின் பிரிவு அவருக்கு சொல்லவியலா பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அத்துன்பம் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்றதால் ராதாராணி அனுபவித்ததைப் போன்றதாகும். அக்காலக் கட்டத்தில், சில நேரங்களில் பகவான் வெளிப்புற உணர்வை வெளிப்படுத்தி, உலக நடைமுறைக்கு ஏற்ப மக்களிடம் பேசவும் பழகவும் செய்வார்; மற்ற நேரங்களில் பகலா இரவா என்பதைக்கூட அறியாமல் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி சற்றும் அறியாத அளவிற்கு கிருஷ்ணரின் நினைவில் மூழ்கியிருப்பார்; சில சமயங்களில் இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட உணர்வில் இருந்தார். ஸ்வரூப தாமோதரர், இராமானந்த ராயர், கோவிந்தர் ஆகிய மூவரும் அவரது நிலையான தோழர்கள். இரவில் இராமானந்த ராயர் அல்லது ஸ்...