உண்மையில், ஒரு ஜீவராசிக்குச் சொந்தமாக இருப்பது ஒன்றுமில்லை. ஆகவே எதையும் அவனால் துறக்கவும் முடியாது என்பதுதான் உண்மை. ஒரு ஜீவராசி அதிக மதிப்புள்ள ஒன்றை அடைவதற்காக ஏதேனும் ஒன்றை துறக்கிறான். ஒரு மாணவன் சிறந்த கல்வியைப் பெறுவதற்காக குழந்தைத்தனமான விருப்பங்களை தியாகம் செய்கிறான். வேலைக்காரன் நல்ல வேலைக்காக சாதாரண வேலையைக் கைவிடுகிறான். அதைப் போலவே, உண்மையான ஆன்மீக மதிப்புள்ள ஒரு பொருளுக்காக பக்தரொருவர் ஜடவுலகைத் துறக்கிறார். ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி மற்றும் ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி முதலானவர்கள் பகவானின் தொண்டிற்காக ஆடம்பரத்தையும், செழிப்பையும் துறந்தனர். பௌதிக கணக்குப்படி அவர்கள் பெரிய மனிதர்களாக இருந்தவர்களாவர். கோஸ்வாமிகள் வங்காளதேசத்து அரசாங்கத்தில் மந்திரிகளாக இருந்தனர். மேலும் ரகுநாத தாஸ கோஸ்வாமி ஒரு பெரிய ஜமீன்தாரின் மகனாக இருந்தார். ஆனால் ஏற்கெனவே அவர்கள் பெற்றிருந்ததைவிட உயர்வான ஒன்றைப் பெறுவதற்காக அனைத்தையும் அவர்கள் துறந்தனர். பொதுவாக பக்தர்கள் பௌதிக செல்வங்களை அவ்வளவாகப் பெற்றிருப்பதில்லை. ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களில் மிகவும் இரகசியமான பொக்கிஷம் ஒன்றை அவர்...