இரண்யகசிபு :- மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்? பிரகலாத மகாராஜன் கூறினார்:- அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர். எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது சொந்த சக்திகளால் இப்பிரபஞ்ச த...